தமிழ்க்கடவுள் முருகன், பக்தர் மனதில் குடியிருக்கும் குமரன், செந்தமிழ் விளைந்த செந்தில் நாதன் சென்னையில் எங்கெல்லாம் இருக்கிறார்..
வடபழனிசென்னையில் முருகன் என்றதும் யாவருக்கும் முதலில் நினைவில் வரக்கூடியவர் வடபழனி முருகனே. வடபழனி வீற்றிருக்கும் வடிவழகு. பக்தர் தமக்கு அருளும் தனிப்பாங்கு. மிகவும் பரபரப்பான கோவில் இது, எத்துணை சினிமா பெட்டிகள் இங்கு பூஜித்து எடுக்கப்பட்டிருக்கும். எத்தனை புது வண்டிகள் இங்கு பூஜை செய்யப்பட்டிருக்கும். ஒரு நல்ல முகூர்த்த நாளில் காலை கோவில் சென்றால் குறைந்தது ஐந்து திருமணங்களாவது இங்கு நிகழக்காணலாம். பிரகாரங்களில் ஆஞ்சனேயனும், அருணகிரியாரும் இக்கோவிலின் சிறப்பு.
பாலதண்டாயுதபாணிதேனாம்பேட்டையில் எல்டாம்ஸ் ரோட்டில் அத்தனை பரபரப்புகளையும் தாண்டி அமைதி தவழ குடிகொண்டு இருக்கிறார், பால தண்டாயுத பாணி. கோவிலில் சிவனும், மரத்தடியில் பிள்ளையாரும் பாங்காய் இருக்க பக்தருக்கு அருள் பாலிக்கும் பாலதண்டாயுதபாணியை இங்கு காணலாம்.
கந்தகோட்டம்சென்னையில் பூக்கடையில் சென்னை மருத்துவ கல்லூரியில் இருந்து சற்றே நடக்கக் கூடிய தொலைவில் இருக்கிறார் கந்தசாமி. மூர்த்தி சிறியது, கீர்த்தி பெரியது. கந்தன் இருக்குமிடம் கந்தகோட்டம் எனத்துவங்கும் கானா பாடலை திரைப்படத்தில் கேட்டிருப்பீர்கள். இத்தலம் சென்னையின் இதயப்பகுதியில் அமைந்து இங்கிருக்கும் வணிகர் தொழும் தெய்வமாய் உள்ளது.
சிங்காரவேலன்மயிலையில் கயிலைநாதனும் கற்பகமுமே சிறப்பு என்றால், அருகிலேயே பிரகாரத்தில் இருக்கிறார் சிங்கார வேலன். ஆறுமுகனாக அருளும் பொருள். மயிலாப்பூர் கபாலி கோவிலில் கந்தன், சீர்மிகு சிங்கார வேலன். மயிலை அமர்ந்த மயில் வாகனன்.
குன்றத்தூர்குன்றத்தூரில் குன்றில் இருக்கிறார் குமரன். நகரின் பரபரப்புகளை தாண்டி.
போரூரில் இருந்து பத்து கிலோ மீட்டர் தாண்டி. பல்லாவரத்தில் இருந்து பம்மல் வழியாகவும் செல்லலாம். அழகிய குன்று. படிகளில் ஏறியும் செல்லலாம். அல்லது வாகனத்தில் மலையில் ஏற இருக்கிறது ஓர் பாதை. ஏறிச்சென்றால் சென்னை முழுதையும் உயர்ந்த இடத்தில் அமர்ந்து தன் அருள்பார்வை பார்த்தவாறு இருக்கிறான் குன்றுதோறும் அமர்ந்து குன்றத்தூரிலும் அமர்ந்த இறைவன்.
அறுபடையப்பன் கோவில்பெசன்ட் நகரில் கடலோரத்தில் அட்ட லட்சுமி கோவிலைதாண்டி சென்றால், கடல் புரத்திலேயே அமைந்திருக்கிறது அறுபடையப்பன் கோவில். ஆறு படைவீடுகளில் அமர்ந்த முருகனை ஒரே இடத்தில் காணக்கிடைக்கிறது. பழனி, பழமுதிர்ச்சோலை, திருத்தணிகை, திருச்செந்தூர், சுவாமிமலை, திருப்பரங்குன்றம் ஆகிய ஆறுதலங்களின் முருகனையும் ஒரே இடத்தில் காணக்கிடைத்தல் எத்துணை அருமை.
சோளிங்க நல்லூர்பழைய மகாபலிபும் சாலையில் அந்த முகப்பு முருகன் கோவிலை கட்டியம் கூறி நம்மை வரவேற்கிறது. சற்று தொலைவு சென்றால் ஓர் அழகிய நந்தவனம். நந்தவனத்தில் நடுநாயகனாய் ஆள் அரவமற்ற ஓரிடத்தில் அமைதியின் ஓர் உருவாய் குமரன். பிரகாரத்தில் வீரபாகு, அனுமன், சப்தகன்னிகள். நிசப்தம் எங்கும், அமைதி,அமைதி மட்டும்.
வண்டுகளின் சத்தம் மட்டும் கேட்கும் ஓரிடத்தில் வடிவழகனை காணுதல் எத்துனை ரம்மியமாக இருக்கிறது.
குமரக்குன்றுகுரோம்பேட்டையில் சிறிய குன்று, அதில் ஒய்யாரமாய் வீற்றிருக்கிறான் குமரன். எம்.ஐ.டி. கல்லூரி முகப்பிலிருந்து சற்று உள்ளே நடந்து செல்லும் தொலைவில் இருக்கிறது, இச்சிறு குன்று. குன்றின் கீழே அனுமன் மற்றும் பெருமாள் கோவில்கள். பிறகு குன்றின் கீழுள்ள விநாயகனை வணங்கி ஏற, பாதி படிகளை தாண்டியதும், சிவனும் சிந்தையில் நிறைந்த தேவியும். அத்தனை படிகளையும் தாண்டி சென்றால் பாங்குடனே பரிமளிக்கும் முருகன். அற்புதமான கோவில்.
சென்னையின் சுற்றுப்புறம் யாவும் செந்தில் நாதன் அமர்ந்து சென்னையை சிறப்பித்துக் கொண்டுள்ளமை, சொல்ல சொல்ல இனிமையன்றோ.