சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Saturday, January 20, 2007

அணிலின் கோடுகளும் ஆட்டின் தாடியும்.

முன்னொரு காலத்தில் முதன் முதலில் தோன்றிய ஆட்டுக்கு தாடி இல்லை.
அதன்பிறகு வந்த ஆடுகளும் அப்படியே. ஆடுகளுக்கு மற்ற உயிரினங்களை பார்க்கும் போது தாங்கள் அழகாக இல்லை என்ற எண்ணம் அதிகமாகியது.

சிங்கத்தின் பிடரி.
சிறுத்தையின் புள்ளிகள்.
புலியின் கோடுகள்.
காண்டா மிருகத்தின் கொம்பு.
யானையின் தந்தம்.
மயிலின் தோகை.
கிளியின் மூக்கு.
அணிலின் கோடுகள். (இந்த கதைப்படி அணிலுக்கு ஆரம்பத்திலேயே கோடுகள் இருந்தன.)

அனைத்தையும் அழகாக படைத்த ஆண்டவன் தங்களை அழகாக படைக்கவில்லையே என்ற எண்ணம் ஆடுகளை ஆட்டிப்படைத்தது.
ஆடுகள் எல்லாம் சேர்ந்து தவமிருந்தன. ஆடுகளின் தவம் ஆண்டவனை எட்டியது.
அனைவருக்கும் அருளும் ஆண்டவன் ஆடுகளுக்கு அருள மாட்டானா என்ன.

ஆண்டவன் ஆடுகளின் முன் பிரத்யட்சமானார்.
"ஆண்டவரே எம்மை அழகாக்குவீராக". ஆடுகள் முறையிட்டன.
ஆண்டவன் ஆடுகளை எவ்வாறு அழகாக்குவது என்று யோசிக்க தொடங்கினார்.
தமது தாவாங்கட்டையிலிருந்த கருகரு தாடியை தடவியபடி யோசனையில் ஆழ்ந்தார்.

அதைப்பார்த்த ஆடுகள் ஆகா. ஆண்டவனின் அறிவு அந்த தாடியில்தான் இருக்கிறது போலும். அதனால்தான் அவர் அதை தடவியபடி யோசிக்கிறார் என்று எண்ணின.

"ஆண்டவனே. எமக்கு உம்மைப்போல் தாடியொன்றை தந்தருளும்" என்று அவை கோரிக்கை வைத்தன.

அன்று முதல் ஆடுகளின் தாடை தாடியால் அலங்காரம் பெற்றது.

ஆனால் என்ன ஆடுகளால் தாடியை தடவியபடி யோசிக்க முடியவில்லை.
அதற்கு பதிலாக அவை தாடையை ஆட்டியபடி அசைபோடுகின்றன.

நீதி: ஆட்டின் தாடி அழகானது அணிலின் கோடுகளைப் போல.

(இது சிறுவர் கதை.. இந்த கதை எந்த சமீபத்திய நிகழ்வுடனும் தொடர்புடையது அல்ல)

Wednesday, January 17, 2007

மகர சங்கராந்தியும் பூமி உருண்டையும்.

மகர சங்கராந்தி என்றால் என்ன?

பொங்கல் மகர சங்கராந்தியாகவும் கொண்டாடப் படுவதாக நாம் அறிவோம்.

சூரியனின் பாதையை காலம் காலமாக கவனித்து வந்த நம் முன்னோர் அது குறிப்பிட்ட காலத்திற்கு தெற்கு நோக்கி நகர்வதை கவனித்தனர்.

அவ்வாறு சூரியன் தெற்கு நோக்கி தொடர்ந்து சென்று ஒரு குறிப்பிட்ட நாளில் தனது தெற்கு பயணத்தை நிறுத்தி மீண்டும் வடக்கு நோக்கி நகர்வதை கவனித்தனர்.

அவ்வாறு தெற்கு நோக்கிய சூரியனின் பயணம் தஷிணாயணம் என்றும் பிறகு சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் உத்தராயணம் என்றும் அழைக்கப்படுகிறது.

இவ்வாறு சூரியன் தனது பாதையில் சென்று மகர ரேகையை சந்திக்கும் நாள் மகர சங்கராந்தி ஆகும். (பார்க்க படம்)



அறிவியல் ரீதியாக பார்த்தால் பூமி தனது அச்சில் இருபத்தி மூணரை பாகை சாய்ந்திருந்து சூரியனை சுற்றுவதால் கடக ரேகையில் உள்ள இந்திய துணைக்கண்டத்தில் இருக்கும் நாம் சூரியன் பெருமளவு தெற்கு நோக்கியே சென்று உதிக்க காண்கிறோம்.

தென் திசையில் சூரியன் தான் உதிக்கக் கூடிய கடைசி இடத்ததை (மகர ரேகையை) அடையும் நாளே மகர சங்கராந்தி.

இம் மகர சங்கராந்தியில் சூரியன் தனது தட்சிணாயணத்தை முடித்து உத்தராயண பயணத்தை துவங்குகிறான்.

உத்தராயணம் புண்ணிய காலமாகும். (மகா பாரதத்தில் பீஷ்மன் உத்தராயண புண்ணிய காலத்திற்காக காத்திருந்து பின்னர் உயிர் நீத்தார் என்று அறிகிறோம்.)

என்ன நாளை எழுந்ததும் சூரியன் தென்மேற்கில் உதிக்கின்றானா (!!!!!) என்று பார்ப்பீர்கள் தானே :)

Monday, January 15, 2007

3007ம் ஆண்டும் சுஜாதாவின் சிறுகதையும்...


(இது நகைச்சுவை பகுதியில் வரவேண்டிய விஞ்ஞான சிறுகதை.... )

"திஸ் ஈஸ் சம்திங் இன்டரஸ்டிங்..." கிருஷ் விர்சுவல் நெட்டில் தடவிக்கொண்டிருந்தான்..

"வாட் ??" இது கலை....

"யூ சீ. எக்சாட்லி 1000 ஹியர்ஸ் அகோ... எ ஸ்டோரி கிரியேட்டட் கிரேட் ஹிஸ்டரி"...

"வாட் ஈஸ் தட்"..

"சம் ரைட்டர் ஸோ கால்டு சுஜாதா ஹேஸ் ரிட்டன் எ ஸ்டோரி... இட் காட் மிக்சட் ரெஸ்பான்சஸ்"..

"இன் வாட் லாங்குவேஜ்.."

"இன் டமில்...".

"ஹோ.. த லாங்குவேஜ் தட் அவர் பொலிட்டீசியன்ஸ் யூஸ் டு கேதர் வோட்ஸ்"..

"நோ.. தமிழ் என்னவொரு அருமையான மொழி தெரியுமா... நமது முன்னோர்களின் மொழி. ஒரு ஆர்வத்தில் நான் அதை கற்றுக்கொண்டிருக்கிறேன்..."

"பாட்டிதான் தமில் கத்து.. கத்துன்னுதுன்னா... யூ டூ?"

"இந்த ஸ்டோரி பார். ஆச்சரியம் இதில் இருக்கும் இருவர் பெயரும் நமது பெயராக இருக்கிறது.
ஆச்சரியமாக இல்லை. இதில் சாதி பிரச்சனையால் அயோத்தியா மண்டபம் தாக்கப்பட்ட கதை எழுதப்பட்டுள்ளது."

"அயோத்தியா மண்டபம்."

"ஆம். சென்னையின் மிகச்சிறந்த இடம். கட்டடக்கலையின் உச்சம். இது சாதி காழ்ப்பால் தாக்கப்பட்ட வரலாற்றை நீ வரலாற்று புத்தகத்தில் படித்திருப்பாய்.."

"ப்ச்... ஐ டோன்ட் ரிமம்பர்.."..

"2006-07ம் ஆண்டுவாக்கில் இது தாக்கப்பட்டதாக நான் படித்திருக்கிறேன். இந்த கதை அப்போது தாக்கப்பட்ட ஒரு பெரியவரை பற்றியது. அவர் சாதி காரணமாக தாக்கப்பட்டார் என்று இந்த கதை சொல்கிறது."

"சாதி.. வாட் ஈஸ் இட்.."

"சாதி மீன்ஸ்... கேஸ்ட்... இட் நோ லாங்கர் எக்ஸிஸ்ட்ஸ்"...

"கேஸ்ட்... ஐ டோண்ட் அண்டர்ஸ்டாண்ட்"..

"இட் கம்ஸ் பை பர்த் தே சே. அப்பர் கேஸ்ட்.. லோயர் கேஸ்ட்... சம் பீப்பிள் டெஸ்டைன்டு டு பி சப்ரஸ்டு பை அதர் செக்ட்ஸ் ஆஃப் பீப்பிள்".

"ஐ ஈவன் கேன்ட் இமாஜின் தட்.."

"திஸ் ஸ்டோரி ஹேஸ் ஸம்திங் டு டூ வித் தட் கேஸ்ட்.."

"ஈஸ் திஸ் ஸ்டோரி தட் கிரேட் ஸ்டோரி..."

"திஸ் ஸ்டோரி ஈஸ் ரியல் ட்ராஷ். பட் ஐ யம் வொண்டரிங் அபவுட் தி ஹைப் இட் கிரியேட்டட்"

"வாட்"

"யூ ஸீ... ஐ சர்ச்டு விர்ச்சுவல்நெட் ஃபார் வள்ளுவர் ஐ காட் ஒன்லி 1000000 ரிசல்ட்ஸ். பட் ஃபார் "சுஜாதா அயோத்யாமண்டபம்" ஐ காட் 5000000 ரிசல்ட்ஸ்."

"ரியல்ல்லி... தன் திஸ் சுஜாதா மஸ்ட் பி தி கிரேட்டஸ்ட் ரைட்டர் எவர் இன் டமில்".

"எஸ். இட் ஸீம்ஸ் ஸோ. திஸ் ஸ்டோரி கேம் இன் மாகசின் கால்டு குமுதம். நெள ஒன்லி டூ இஷ்யூஸ் ஆஃப் திஸ் புக் ஆர் அவய்லபிள். ஒன் இன் அவர் மியூசியம். அனதர் கான் ஃபார் 1000000 டாலர்ஸ் இன் ஆக்சன் லாஸ்ட் வீக்"

"ஓக்கே. இனஃப்.. வாட் ஆர் யூ கோயிங் டு டூ நெள ?" அவள் பார்வையில் ஒரு கிறக்கம் இருந்தது.

"ஐ அம் ரீடிங் ரெவ்யூஸ் ஆஃப் திஸ் ஸ்டோரி...."

"ஸ்டுபிட்... யூ ஸ்டில் வான்டு டூ கன்டின்யூ திஸ் சில்லி ரீடிங்....."

இருவர் கண்களும் சந்தித்தன.

சற்று நேரத்தில் விளக்கு மற்றும் விர்ச்சுவல் நெட் அணைக்கப்பட்டது.

"தேர் ஈஸ் நோ கேஸ்ட்ஸ். ஆக்சுவலி ஒன்லி மென் அண்டு விமென்".

"நாட் ஈவன் தட் டூ. தேர் ஈஸ் நோ டிஃபரன்ஸ் அட் ஆல்".

இருந்த அந்த கடைசி டிஃபரன்ஸ் கூட அந்த நேரத்தில் காணாமல் போய்க்கொண்டிருந்தது.

---------------------- ----------------------------------------------------

(கதையை படிச்சு முடிச்சதும்... கலை என்ன சாதி... கிருஷ் என்ன ஜாதி அப்படின்னு ஆராய்ச்சிக்கண்ணோட பார்க்கின்ற எனதருமை மக்களே..
ஆயிரம் வருஷம் ஆயிருச்சிய்யா... சாதி இப்ப உங்க பார்வையில மட்டுந்தாய்யா இருக்கு. நன்றி....)

Friday, January 12, 2007

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

எரிந்து அடங்கியது தீ...
மார்கழியின் குளிர் விலகி..
தை வரும் பாதை தெரிய..
பழமை நெருப்பில் மாய..
வந்தது போகி....


புதுச்சுண்ணாம்பு சுவர்கள்..
புத்தாடை சிறுவர்கள்..
தோகை எடை தாங்காமல்
சரிந்த கரும்பு...
முற்றத்தில் வைக்கப்பட்ட
மூன்று கல் அடுப்பு...
பொங்கியது பொங்கல் பானை..
பொங்கலோ பொங்கல்...


வண்ணம் தீட்டப் பட்ட கொம்புகள்..
அதில் கட்டப்பட்ட வண்ண பலூன்..
தனது கொம்பின் வண்ணத்தை
அறியுமோ அந்தக் காளை..
மாட்டுப் பொங்கல்.

பெரியவர்கள் காலில்
விழுந்து எழப்புறப்பட்ட படையொன்று..
எத்தனை முறை விழுகிறோமோ
அத்தனை முறையும்
வரும்படியுடன் எழுந்தவாறு.....
காணும் பொங்கல்....

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Tuesday, January 09, 2007

கவிதையல்லாத கவிதைகள்

1
அதோ பார் நிலா. இல்லை சூரியன்.
வா அருகே சென்று பார்ப்போம்.
விழுந்து இறந்தன விட்டில் பூச்சிகள்.

2
அப்பாடா இன்று ஓய்வு.
சே இந்த பூனை மட்டும்.
ஏழை வீட்டு அடுப்பு.

3
தவளைகள் சத்தம் இன்று அதிகம்.
மழைக்காலமா என்ன ?
இல்லை வருகிறது தேர்தல்.

4
நட்சத்திரங்கள் கண்சிமிட்டின..
எத்துணை அழகாயிருக்கிறது
இந்த குடிசையின் கூரை.

5
இரும்புக் கதவுகள் இழுத்துப் பூட்டப்பட்டன...
காவலுக்கு தடிக் கம்புகளும் கத்திகளும்..
தன்னை காப்பாற்றி கொள்ள முடியா கடவுளின் சிலை.

6
கண்ணன் பிறந்தது காராக்கிரகம்.
எனக்கும் அஃதே சுகம்.
சிறையில் போலிச் சாமியார்.

7
நீயன்றி என் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை.
தேடிக்கொண்டு இருக்கின்றேன். எங்கு சென்றாய்.
இங்கனம் உனது ஜோடியாகிய செருப்பு.

8
எத்தனை உதறிய பின்னும்
எழுத மறுக்கிறது என் பேனா.
கவிதையல்லாத கவிதைகள்.