டென்ஷன்.. டென்ஷன்.. டென்ஷன்....
நமது வாழ்க்கையில் எல்லாமே அவசரம்... ஆத்திரம்... ஆரவாரம்
இந்த அவசரத்திலும் ஆத்திரத்திலும் நாம் அடுத்தவரை காயப்படுத்தி நம்மையும் காயப்படுத்திக்கொள்கிறோம். அமைதியற்ற வாழ்க்கைக்கு எது காரணம். நிதானமின்மை. பொறுமையின்மை.
----------
அவன்... சிறுகுடும்பத்தலைவன்... அவனைப்போலவே வேலைக்கு செல்லும் மனைவி.. ஐந்து வயது பெண் குழந்தை...
ஒரு நாள் காலை...
எட்டு மணி முப்பது நிமிடம்... அலுவலகங்களும் பள்ளிக்கூடமும் ஒன்பது மணிக்கு... வேலைக்கு செல்லும் அவசரம்..
காலை உணவு... காபி... மேஜை மீது இருந்த காபியை கைதவறுதலாக கொட்டி விட்டது குழந்தை... அவன் சட்டை மீது காபிக்கறை.
கோபம் தலைக்கேறுகிறது அவனுக்கு... குழந்தையை திட்ட துவங்குகிறான்..
"சனியனே... சே... சட்டையெல்லாம் நாசம்..." துடைத்துக்கொண்டே அடுத்தடுத்த வசவுகள்.
குழந்தை அழுகிறது...
மனைவியை பார்த்து திரும்புகிறான்...
"கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா. குழந்தையை பார்த்துக்க கூடாதா...."
"ஏன்... நீங்க பார்த்துக்க கூடாதா... காலையிலிருந்து சமையல்ல இருந்து எல்லாம் நானே செய்யறேன். நான் மட்டும் என்ன மிஷினா.."..
"ஆமா பெரிய வேலை... குழந்தைய பார்த்துக்கன்ன ஓவரா பேசுற..."
சண்டை நீளுகிறது.... நேரம் 8:50..
சண்டையில் நேரம் கரைந்ததை உணருகிறார்கள்...
ஒருவர் மேல் ஒருவருக்கு கோபம்...
மனைவி அவனை திட்டிக் கொண்டே குழந்தையின் உடையை மாற்றுகிறாள்.
குழந்தையின் பள்ளி பேருந்து தவறிவிட்டது. மனைவிக்கும் நேரமாகிறது.
"நீ ஆட்டோ பிடிச்சு போ.. நான் குழந்தைய பள்ளிக்கூடத்துல விட்டுட்டு போகிறேன்." சட்டையை மாற்றி கொண்டு கிளம்புகிறான்.
குறுக்கு வழி... மடக்குகிறார் போலீஸ்காரர்... ஒன் வே.... அவசரம் என்று சொல்லி ஐம்பது ரூபாய் அபராதம் கட்டுகிறான்.
பள்ளியில் குழந்தையை இறக்கிவிட அது சோகமாக இறங்கி போகிறது.
அலுவலகத்தை சென்று சேர 9:30... தாமதம்... அன்று முழுவதும் அலுவல்களில் தடுமாற்றம்.
வரவேண்டிய பிரமோஷன் வரவில்லை.
களைத்துப்போய் மாலை வீடு திரும்புகிறான்... காலையில் பாதியில் விட்ட சண்டை தொடருகிறது....
நரகத்தை உணருகிறான்...
----------------------
இதற்கு யார்காரணம்...
1) காபியை கொட்டிய குழந்தை...
2) குழந்தையை கவனிக்காமல் விட்ட தாய்.
3) ஒன்வேயில் மடக்கிய போலீஸ்....
யாருமில்லை..... அவனேதான்.... எப்படி.... பார்ப்போம்
----------------
குழந்தை காபியை கொட்டுகிறது...
"அச்சச்சோ... தவறிட்டதா... பார்த்து எடுக்கக் கூடாது" குழந்தையை அள்ளி அணைக்கிறான்.
குழந்தைக்கும் ஆடைமாற்றி தானும் தன் சட்டையை மாற்றுகிறான்.
"அப்பாவும் பொண்ணும் காலையிலேயே உங்க லூட்டிய ஆரம்பிச்சாச்சா.. " மனைவி சிரிக்கிறாள்.
பள்ளி பேருந்து வருகிறது. குழந்தை அப்பா அம்மாவுக்கு டாட்டா காண்பித்து சிரித்தவாறு பேருந்தில் ஏறுகிறது.
மனைவியை அவள் அலுவலகத்தில் இறக்கிவிடுகிறான்.
அலுவலகம் செல்கிறான். 8:57.
"பங்சுவாலிட்டியை உன்கிட்டதாம்பா கத்துக்கணும்" பாஸ் மகிழ்கிறார். "உன்னை பிரமோட் பண்ணியிருக்கேன்".
மகிழ்ச்சியோடு வீடு திரும்புகிறான்.
"டாடிக்கு பிரமோஷன் வந்திருக்கு... நாம அத கொண்டாட சினிமாவுக்கு போயிட்டு அப்படியே வெளிய சாப்பிட்டுட்டு வர்றோம்."
"ஏய்..." குழந்தையின் மகிழ்ச்சிக் குரல். மகிழ்ச்சியாக வெளியே செல்கிறார்கள்.
சொர்க்கத்தை உணருகிறான்.
--------------------------------------------
நமது மகிழ்ச்சி நம்மிடம்தான் இருக்கிறது.
வாழ்க்கையின் மகிழ்ச்சி திட்டமிட்டு வருவதில்லை. எந்த கணத்திலும் நாம் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிக்கிறோமா என்பதில்தான் இருக்கிறது.
வள்ளுவம்:
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்
3 Comments:
You are right. Good post.
நல்ல பதிவு. நல்ல கருத்து. நல்ல அறிவுரை.
பகிர்ந்தமைக்கு நன்றி சாத்வீகன்.
நன்றி மாசிலா மற்றும் அனானி.
Post a Comment
<< Home