அறையப்பட்ட ஆணி
அந்த சிறுவனுக்கு மிகவும் கோபம் வரும்.
எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தார் தந்தை.
அவன் கேட்பவனாக இல்லை.
ஒருநாள் தந்தை சிறுவனிடம் நிறைய ஆணிகளை கொடுத்தார்.
"உனக்கு ஒவ்வொரு முறை கோபம் வரும்போதும் கோபத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தாதே. அதற்கு பதில் நமது வீட்டு வேலியில் ஒரு ஆணியை அடித்து வா. " என்றார்.
முதல் வாரத்தில் சிறுவன் 25 ஆணிகளை வேலியில் அடித்திருந்தான். நாட்கள் செல்ல செல்ல அவன் அடிக்கும் ஆணிகளின் எண்ணிக்கை குறைந்தது.
ஒரு கட்டத்தில் அவனால் அவனது கோபத்தை முழுமையாக கட்டுப் படுத்த முடிந்தது. தந்தையிடம் தன்னால் இப்போது கோபத்தை கட்டுப்படுத்த முடிவதாக அவன் சொன்னான்.
அவர் சொன்னார். " எப்போதெல்லாம் உன்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடிகிறதோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை வேலியில் இருந்து பிடுங்கு".
நாட்கள் சென்றன. ஒரு கட்டத்தில் சிறுவன் வேலியில் தான் அறைந்த ஆணிகள் அனைத்தையும் பிடுங்கி விட்டான்.
தந்தை சொன்னார். "மகனே. பாராட்டுகிறேன். இப்போது அந்த வேலியை பார். அதில் ஆணிகள் அடிக்கப்பட்ட இடத்தில் இப்போது துளைகள் உள்ளன. வேலி முன்னைப்போல் இல்லாது இந்த வடுக்களுடன்தான் இனி இருக்கும். கோபத்தில் வெளிப்படும் வார்த்தைகளும் இதுபோலத்தான். இதயத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்துபவை. கத்தியால் குத்தப்பட்ட வடு ஆறிவிடும். வார்த்தைகளின் வடு எளிதில் ஆறாது."
புரிந்து கொண்ட சிறுவன் கோபத்தை முற்றிலும் விட்டொழித்தான்.
----
வள்ளுவம்:
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
-----------
3 Comments:
ஏற்கெனவே படிச்சிருக்கேன். எங்கேன்னு தான் தெரியலை. நல்லதொரு கருத்து. நன்றிகள்.
சாத்வீகன்,
நல்ல பதிவு.
நல்ல கருத்து
எனக்கு ரொம்ப பிடித்தது அந்த படிமம் //ஆணீ துளைகளோடு இருக்கும் வேலி//
எல்லோரும் யோசிக்க வேண்டிய விடயம்.
Post a Comment
<< Home