சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Monday, February 18, 2008

இருத்தலை உறுதி செய்யும் கவிதைகள்

எழுதப் படாத பக்கங்கள்
புரட்டி புரட்டி
பார்க்கிறேன்.
இதை விட எனது
வாழ்க்கையை நான் சிறப்பாக
எழுதி இருக்க முடியாது.

*******

காகிதத்தில் கொட்டிய வார்த்தைகள்
கதறிக் கொண்டிருந்தன.
"நாங்கள் வார்த்தைகள்."
"கவிதை என்று எப்படி சொல்வாய் ?"

********

மீண்டும் பேனா மூடி திறந்தேன்
மீண்டும் கவிதையா ?
காகிதங்கள் ஓடி ஒளிந்தன.
பேனாவை வீசியெறிந்தேன்
விசைப்பலகையொன்றில் தட்டச்ச துவங்கினேன்.

********

எதற்கு இந்த கவிதைகள்
அல்லது வார்த்தைகள்.
இவை எப்பொருளைப் பாடுகின்றன.
இவை எதையும்
பாடுவதில்லை.
இவ்வரிகள்
நான் இருக்கின்றேன்
என்பதை உறுதி செய்கின்றன.
அவ்வளவே.

********

ஓடி ஒளிந்த
காகிதங்களே !
திரும்பி வாருங்கள்.
இனி வார்த்தைகளை
பிரித்து போட்டு
பின் நவீனத்துவம் என்று
சொல்ல மாட்டேன்.

********

இனியும் எழுதுவேன்
வார்த்தைகளே
அச்சம் வேண்டாம்.
நீங்கள் உங்களை வார்த்தைகள்
எனச் சொல்லிக் கொள்ளுங்கள்.
நான் கவிதை என்று சொல்லிக்
கொள்கிறேன்.

********

எழுதத் துவங்குகிறேன்
வார்த்தைகளுக்கு வலிக்காத வண்ணம்.

********

Wednesday, November 14, 2007

கந்தபுராணம் இராமாயணம் ஒரு ஒப்பீடு.

இன்று கந்த சஷ்டி. முருகன் கோயில் தோறும் இது பெருவிழா. முருகன் அசுரன் சூரபத்மனை கொன்று தேவர்க்கு அருளிய நாள்.

கந்தன் பிறப்பு.. கந்தன் சிறுவயது திருவிளையாடல்கள்... கந்தன் போருக்கு புறப்பாடு. போரில் அசுரர்களை அழித்தல். பின்னர் வள்ளி தெய்வானையை மணத்தல். இதுதான் கந்த புராணம்.

கதையளவில் கந்தபுராணம் பெருமளவில் இராமயணக்கதையோடு ஒத்து வருவதைக்காணலாம்.

1. இராமாயணத்தில் இராவணனை கொல்ல இராமன் பிறப்பை தேவர்கள் எதிர்நோக்குதல்.
கந்தபுராணத்தில் சூரபத்மனை கொல்ல கந்தன் பிறப்பை தேவர்கள் எதிர்நோக்குதல்.

2. இராவணன் சிவபக்தன். தவங்கள் பல இயற்றி வரங்கள் பல பெற்றவன்.
சூரபத்மனும் சிவபக்தன். தவத்தின் மகிமையால் சிவத்தின் சக்தியன்றி வேறொன்றால் மரணமில்லையென வரம் பெற்றவன்.

3. இராவணனின் தம்பி கும்பகர்ணன். தங்கை அரக்கியாகிய சூர்ப்பனகை. முனிகுமாரர்கள்.
சூரபத்மனின் தம்பிகள் தாராகாசூரன், சிங்கமுகன். தங்கை ஆட்டுமுகம் கொண்ட அசமுகி. முனிகுமாரர்கள்.

4. இராவணனின் வீரமகன் இந்திரஜித் இந்திரனை வென்றவன்.
சூரபத்மனின் மகன் பானுகோபன் சிறுவயதில் சூரியனை பிடித்து தன் தொட்டில் காலில் கட்டிப்போட்டவன்.

5. இராமன் சீதையை சிறைமீட்க போர்தொடுத்தான்.
கந்தன் ஜயந்தன் முதலான தேவர்களை சிறைமீட்க போர்தொடுத்தான்.

6. போருக்கு முன் இராமனின் தூதனாக அனுமன் கடல்தாண்டி செல்லுதல். சீதையை கண்டு பின் இராவணனிடம் தூதுரைத்து திரும்புதல்.
போருக்கு முன் கந்தனின் தூதனாக வீரபாகு கடல்தாண்டி செல்லுதல். ஜயந்தனை கண்டு சூரபத்மனிடம் தூதுரைத்து திரும்புதல்.

7. போரில் தன்னை எதிர்ப்பவன் மகாவிஷ்ணுவின் அம்சமே என அறிந்தும் இராவணன் தொடர்ந்து போரிட்டு இறைவன் திருவடியை அடைதல்.
எதிர்த்துப் போர்புரியும் குமரன் சிவனின் திருக்குமரனே என அறிந்தும் சூரபத்மன் தொடர்ந்து போரிட்டு மயிலாகவும் சேவல் கொடியாகவும் முருகன் திருவடியை அடைதல்.


இரண்டு காவியங்களிலும் காணும் ஒப்புமைகள் மிக அதிகம்.

இராமயணம் என்ற வைணவ புராணத்திற்கு இணையான சைவ புராணமாக கந்தபுராணம் மிளிர்கிறது என்று சொல்வாரும் உண்டு.
இரண்டில் பழமையானது எது எனப் பார்க்கப் புகின் கந்தபுராணமே பழமையானதாகவும் 18 புராணங்களில் ஒன்றாக, சிவனுக்கு உரிய பத்து புராணங்களில் பத்தாவது புராணமாகவும் மிளிர்கிறது.


கந்தன், கடம்பன், குகன், அறுமுகன், சரவணன், செந்தில் ஆண்டவன், தமிழ் கொண்ட முருகன் அசுரனை கொன்று போரில் வென்ற இத்திருநாள் தீமைகள் யாவும் விலகி நன்மைகள் பெருகும் நன் நாள்.

இந்நாளில் கந்தனை வணங்குவோம்.

ஓம் சரவணபவ.