புலால் மறுத்த இராமன்
கம்பன் காட்டும் குகப்படலம்.
இராமன் நாடு நீங்கி காடு போகிறான். கடக்க ஒரு கங்கை இருக்கிறது. கங்கைக் கரையின் தலைவனாம் குகன் இராமனை காண வருகிறான்...
வரும் குகன் இராமனை காண வெறுங்கையோடு வரவில்லை. உண்ண உணவு கொணருகிறான்.
'இருத்தி ஈண்டு' என்னலோடும் இருந்திலன்; எல்லை நீத்த
அருத்தியன், 'தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திரு உளம்?' என்ன, வீரன்
விருத்த மாதவரை நோக்கி முறுவலன், விளம்பலுற்றான்:
அமரச் சொல்லி இராமன் சொல்லியும் குகன் அமரவில்லை. மற்று தான் கொணர்ந்த தேனும் மீனும் ஏற்க சொல்லி வேண்டுகிறான்.
'அரிய, தாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே?
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்; எம்மனோர்க்கும்
உரியன; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ?' என்றான்.
"உள்ளத்தில் அமைந்த அன்பால் நீ கொணர்ந்த இப்பொருட்கள் அமுதத்தை ஒத்தவை. இவை எனக்கு விலக்கத்தக்கவை ஆயினும் உனது அன்பினால் கொணர்ந்தமையால் இவை புனிதமானவை. எனக்கு ஏற்புடையதே. நான் இதனை உண்டவன் ஆகினேன்."
எனக்கூறி இராமன் அதனை விலக்குகிறான். இராமன் சத்திரியன். அவனுக்கு புலால் ஏற்புடையது. ஆயினும் விலக்குகிறான்.
வள்ளுவன் எழுதிய புலால் மறுத்தலுக்கு இங்கு இராமனே ஓர் உதாரணமாய் உயர்ந்து நிற்கிறான்.
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
தனது மாமிசப்பெருக்குக்காக பிற உயிர்களின் மாமிசம் உண்பவனிடம் அருள் இருக்குமோ..
இராமன் அருளின் மறுவடிவம்... மாமிசம் அவன் ஏற்கத்தக்கதோ...இராமனின் புலால் மறுத்தல் குகனை மாற்றுகிறது. மற்றோரிடத்தில் குகன் சொல்கிறான்...
'தேன் உள; திணை உண்டால்; தேவரும் நுகர்தற்கு ஆம்
ஊன் உள; துணை நாயேம் உயிர் உள; விளையாடக்
கான் உள; புனல் ஆடக் கங்கையும் உளது அன்றோ?
நான் உளதனையும் நீ இனிது இரு; நட, எம்பால்;
"தேவரீர், தாங்கள் உண்ண தேனும், திணையும் உள்ளது. நான் உயிர் வாழ ஊன் உள்ளது. விளையாட காடும் நீராட கங்கையும் உள்ளது. நான் உள்ளவரை இங்கிருப்பாய்... " என்கிறான் குகன். ஊன் நீக்கி இராமன் கொள்வதற்காக திணையை கொணர்கிறான்.
இராமனும் குகனின் அன்பை ஏற்று, குகனையும் தனது சகோதரனாய் பாவித்து குகனோடு ஐவரானோம் என்று சொல்லி தந்தை சொல் நின்று கானகம் ஏகுகிறான்.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்
வள்ளுவன் வாக்குக்கு இணங்க புலால் நீக்கிய இராமனை எல்லா உயிர்களும் தொழுகின்றன.