சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Wednesday, November 29, 2006

புலால் மறுத்த இராமன்


கம்பன் காட்டும் குகப்படலம்.
இராமன் நாடு நீங்கி காடு போகிறான். கடக்க ஒரு கங்கை இருக்கிறது. கங்கைக் கரையின் தலைவனாம் குகன் இராமனை காண வருகிறான்...

வரும் குகன் இராமனை காண வெறுங்கையோடு வரவில்லை. உண்ண உணவு கொணருகிறான்.


'இருத்தி ஈண்டு' என்னலோடும் இருந்திலன்; எல்லை நீத்த
அருத்தியன், 'தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திரு உளம்?' என்ன, வீரன்
விருத்த மாதவரை நோக்கி முறுவலன், விளம்பலுற்றான்:


அமரச் சொல்லி இராமன் சொல்லியும் குகன் அமரவில்லை. மற்று தான் கொணர்ந்த தேனும் மீனும் ஏற்க சொல்லி வேண்டுகிறான்.


'அரிய, தாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே?
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்; எம்மனோர்க்கும்
உரியன; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ?' என்றான்.


"உள்ளத்தில் அமைந்த அன்பால் நீ கொணர்ந்த இப்பொருட்கள் அமுதத்தை ஒத்தவை. இவை எனக்கு விலக்கத்தக்கவை ஆயினும் உனது அன்பினால் கொணர்ந்தமையால் இவை புனிதமானவை. எனக்கு ஏற்புடையதே. நான் இதனை உண்டவன் ஆகினேன்."

எனக்கூறி இராமன் அதனை விலக்குகிறான். இராமன் சத்திரியன். அவனுக்கு புலால் ஏற்புடையது. ஆயினும் விலக்குகிறான்.

வள்ளுவன் எழுதிய புலால் மறுத்தலுக்கு இங்கு இராமனே ஓர் உதாரணமாய் உயர்ந்து நிற்கிறான்.


தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.


தனது மாமிசப்பெருக்குக்காக பிற உயிர்களின் மாமிசம் உண்பவனிடம் அருள் இருக்குமோ..

இராமன் அருளின் மறுவடிவம்... மாமிசம் அவன் ஏற்கத்தக்கதோ...இராமனின் புலால் மறுத்தல் குகனை மாற்றுகிறது. மற்றோரிடத்தில் குகன் சொல்கிறான்...

'தேன் உள; திணை உண்டால்; தேவரும் நுகர்தற்கு ஆம்
ஊன் உள; துணை நாயேம் உயிர் உள; விளையாடக்
கான் உள; புனல் ஆடக் கங்கையும் உளது அன்றோ?
நான் உளதனையும் நீ இனிது இரு; நட, எம்பால்;

"தேவரீர், தாங்கள் உண்ண தேனும், திணையும் உள்ளது. நான் உயிர் வாழ ஊன் உள்ளது. விளையாட காடும் நீராட கங்கையும் உள்ளது. நான் உள்ளவரை இங்கிருப்பாய்... " என்கிறான் குகன். ஊன் நீக்கி இராமன் கொள்வதற்காக திணையை கொணர்கிறான்.


இராமனும் குகனின் அன்பை ஏற்று, குகனையும் தனது சகோதரனாய் பாவித்து குகனோடு ஐவரானோம் என்று சொல்லி தந்தை சொல் நின்று கானகம் ஏகுகிறான்.


கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்


வள்ளுவன் வாக்குக்கு இணங்க புலால் நீக்கிய இராமனை எல்லா உயிர்களும் தொழுகின்றன.




15 Comments:

Blogger dondu(#11168674346665545885) said...

இராமபிரான் க்ஷத்திரியர். அவர் கண்டிப்பாக புலால் உண்பவராகத்தான் இருக்க முடியும். கம்பரோ மற்றவர்களோ அவ்வாறு எழுதியிருந்தால் அது உண்மைக்கு புறம்பானதாகவே இருக்கும்.

கம்ப ராமாயணத்தில் வரும் நாட்டு வர்ணனை கூட சோழநாட்டைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கும். இது பற்றி சமீபத்தில் 1961-62 கல்வியாண்டில் நான் சென்னை திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பில் படிக்கையில் எங்கள் தமிழ் ஆசிரியர் அப்ரஹாம் லிங்கன் (அவரது உண்மைப் பெயர் தெரியாது) அவர்களை கேட்டபோது, அவர் சீறப்புராணம் எழுதிய உமறுப்புலவரும் நாட்டு வருணனையில் தமிழ் நாட்டை வைத்துத்தான் எழுதினார் எனக் கூறியுள்ளார்.

ஆக, கம்பர் கூறியதையெல்லாம் இங்கு எடுத்து கொள்ளத் தேவையில்லை. ராமர் க்ஷத்திரியர் அவ்வளவே. மற்றப்படி புலால் உண்பவர்கள் எல்லாம் பாவிகள் என்று எழுதுவது ஓவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5:47 PM  
Blogger சாத்வீகன் said...

அன்புள்ள டோண்டு ராகவன் அவர்களே,

ஊன் உண்பவர்களை பாவிகள் என்று எவ்விடத்திலும் நான் சொல்லவில்லை.

ஊன் உண்ணாமை ஒரு நல்ல கொள்கை அவ்வளவே. அதை ஏற்பதும் விடுப்பதும் அவரவர் விருப்பம்.

வள்ளுவமும் ஊன் உண்ணாமையை உயர்வாய் சொல்கிறது தனியாய் ஓர் அதிகாரம் தந்து....

இராமன் சத்ரியனாக இருப்பதால் கட்டாயம் ஊன் உண்பவனாக இருப்பான் என்பது தங்கள் ஊகமா என தெரியவில்லை.

கம்பன் காட்டும் இராமன் ஊன் மறுப்பவன்.

வால்மீகி இராமாயணத்தில் இராமன் மாமிசம் ஏற்கின்றானா ? நான் அறியேன்... தங்களின் மற்றவர்களோவில் வால்மீகியும் உண்டா ?

வயல் வரப்புகளின் வர்ணனைக்காக கம்பர் தான் கண்ட சோழ நாட்டை பாடியிருக்கலாம், ஆனால் இராமனின் குணநலன்களுக்கு மூலத்தை சார்ந்தே எழுதியிருப்பார் என எண்ணுகிறேன்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அன்புடன்,
சாத்வீகன்

6:25 PM  
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

நல்ல பதிவு சாத்வீகன்!
புலால் உண்பவரைக் குறை சொல்லாது புலால் மறுத்தல் மட்டும் அழகுபடச் சொல்லியுள்ளீர்கள்! நன்றி!

சத்ரியன் தான்; இருப்பினும் எப்படி பல தார மணம் புரியவில்லையோ அப்படித் தான் இதுவும்! தனக்கென கொள்கை வகுத்துக் கொண்டான் இராமன்!

ஒரு பொருள் கிடைக்காததால் துறப்பது துறவு இல்லை! அது இருந்தும் மறுத்தான் பாருங்கள்! அதுவே துறவில் துணிவு!

6:40 PM  
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கம்பரோ மற்றவர்களோ அவ்வாறு எழுதியிருந்தால் அது உண்மைக்கு புறம்பானதாகவே இருக்கும்//

டோண்டு சார் சொல்வது தவறு!
மூலத்திலும் ராமன் புலால் மறுத்ததாகவே வால்மீகியும் காட்டியுள்ளார்;
குகன் பல உணவு வகைகளை அளிக்க, ராமன் தன் விரத நிலையைச் சொல்லி, மேலும் வன வாழ்வில் காய், கனி, கிழங்குகள், அன்னம் உண்பதே சாலச் சிறந்தது என்று நயமாக மறுத்து மற்றவற்றை ஒதுக்கி விடுகிறான்! (பலம், மூலம், ஆஷிணம்)
அயோத்யா காண்டம், 50ஆம் சருக்கம்.

//ஆக, கம்பர் கூறியதையெல்லாம் இங்கு எடுத்து கொள்ளத் தேவையில்லை//

கம்பர் மூலத்தின் மூலத்தோடு அடியொற்றித் தான் செல்கிறார், பல இடங்களில்! காவிய நயத்தில் மாற்றங்கள் செய்து, கதை மாந்தரின் குணங்களை மேலும் மெருகு ஊட்டினாரே அன்றி, அடிப்படையில் அவர் கை வைக்கவில்லை!

கம்பர் போன்ற அறிவில் சிறந்த கவிஞர்கள் இது போன்று வேறு மொழியில் இருந்து கொண்டு வரும் கருப்பொருளைச் சிதையாது செய்வது என்பது மிகப் பெரும் ஒன்று!
கம்பர் மிகப் பொறுமையாக, கவனமாக, அடக்கத்துடன் தன் பணியைச் செவ்வனே செய்கிறார்! இது அவரின் ஒவ்வொரு அடியிலும் பரிமளிக்கும்!

எனவே "கம்பர் கூறியதையெல்லாம் இங்கு எடுத்து கொள்ளத் தேவையில்லை" என்று மேம்போக்காகச் சொல்வது சரியல்ல!!!

7:01 PM  
Blogger சாத்வீகன் said...

நன்றி கண்ணபிரான்

தனக்கென ஒரு நெறியை வகுத்து அதன்படி வாழ்வதே சிறப்பு.
இராமன் தானேயோர் தனியுதாரணமாய் வாழ்ந்தமையே இராமாயணம்.
இவையே இக்காவிய நாயகனின் சிறப்பியல்புகள்.
இதையே கம்பன் அழகுற பழகு தமிழில் காட்டி செல்கின்றான்.

தாங்கள் வால்மீகி இராமாயணத்தை சுட்டி தெளியச் செய்தமைக்கு மிக்க நன்றி.

7:09 PM  
Blogger ஓகை said...

கம்பர் சோழ நாட்டவர். சோநாட்டு இயல்பை பொன்னியின் செல்வனில் விமரிசையாக விவரித்திருப்பார் கல்கி.

என் இந்தப் பதிவைப் பாருங்கள்.

இராமனின் புலால் விலக்கம் அவனுடைய மரவுரி தரித்த விரதநிலைக்கு மட்டுமே உரித்தானதா அல்லது அவதாரம் முழுதும் அப்படியா என்பது குறித்து பாடல்கள் இருக்கிறதா?

8:00 PM  
Blogger dondu(#11168674346665545885) said...

"குகன் பல உணவு வகைகளை அளிக்க, ராமன் தன் விரத நிலையைச் சொல்லி, மேலும் வன வாழ்வில் காய், கனி, கிழங்குகள், அன்னம் உண்பதே சாலச் சிறந்தது என்று நயமாக மறுத்து மற்றவற்றை ஒதுக்கி விடுகிறான்! (பலம், மூலம், ஆஷிணம்)
அயோத்யா காண்டம், 50ஆம் சருக்கம்."

அங்கேயே வருகிறேன். இங்கு விரதம் என்று கூறியிருப்பது முக்கியம். அசைவ உணவு உண்பவர்கள் கூட மாதத்தில் சில நாட்கள் விரதம் இருப்பதைப் போல என்று வைத்துக் கொள்ளலாம். மற்றப்படி நான் கூறியது சத்திரியரின் தினப்படி வாழ்க்கையைப் பற்றியே.

ஆனால் ராமபிரான் தினப்படி சைவ உணவு மட்டுமே மட்டும் உண்டான் என்று கூறுவது ஓவர் என்றுதான் நினைக்கிறேன்.

மற்றப்படி என் அப்பன் ராமபிரான் மேல் எனக்கு உள்ள பக்தியை கூறவும் வேண்டுமோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

8:32 PM  
Blogger சாத்வீகன் said...

THE QUESTION OF WHETHER LORD RAMA ATE MEAT IN THE RAMAYANA


Sometimes the idea comes up that the Ramayana indicates that Lord Rama ate meat, especially while He was in exile in the woods. However, there is no verse in Valmiki’s Ramayana that establishes that Lord Rama, Lakshmana or Sita ate meat while in or even out of exile. In fact, it seems to show that He very much disliked the notion of eating meat. The evidence for this is as follows:
The verse that comes in question in this regard in the Valmiki Ramayana, Sundarakanda, Skanda 36, Sloka 41, says:
“Na mamsam Raghava bhunkte, na chaiva madhu sevate, Vanyam suvihitam nityam bhaktamsnati panchamam.”

The literal translation of this verse is: “Sri Rama does not take meat or honey. He partakes everyday of wild fruits and boiled (wild) rice fully sanctioned (for an ascetic) in the evening.”

Faulty English translations have put it as something like this: Hanuman to Sita, “When you were away, Sri Rama did not even take deer meat.” This incorrectly implies that Rama normally may have ate meat but did not do so while Sita was away from Him.

Now in this verse, the Sanskrit word bhunkte is a verb that means strong desire for eating. It comes from the Sanskrit bhaksha, which means voracious eating. When you say Na bhunkte, as we see in the line that says “Na mamsam Raghava bhunkte”, it gives a complete negative connotation, meaning that Lord Rama abhorred meat-eating. On the other hand, if the words were “Na mamsam Raghavo khadate”, it could then mean that Raghava may have engaged in meat eating before, but had stopped it at this point. However, this is not what is said, but is where some English translations present a similar confusion, or are simply unclear about this issue. Nonetheless, by analyzing the correct view of the proper translation, it indicates clearly that the Valmiki Ramayana shows how Lord Rama not only did not eat meat, but greatly disliked it.

11:20 PM  
Blogger சாத்வீகன் said...

ஓகை வருகைக்கு நன்றி...


தங்கள் பக்கங்களில் கம்பனின் கங்கையை மருத நிலமாக்கி விவரித்த பாங்கு படித்தேன்...

நிலத்தை மருதமாய் பகுத்தறிவது தமிழர் மரபு. இதை கங்கைக்கு கம்பன் கொண்டு சென்றான் என வாதிடலாம். மருதம் எங்கிருந்தாலும் வயல் பரப்பே. வட நாடாயினும் சரி.. தென்னாடாயினும் சரி.. வயலும் வயல் சார்ந்த பகுதி தமிழ் சொல்லாடலின் படி மருதமே...

வால்மீகியின் மிகுந்த தர்க்கத்துக்கு உள்ளான இராமன் மாமிசம் சாப்பிட்டான் என ஆதாரம் தரத்தக்க ஆயினும் ஐயத்திற்கு இடமான வரிகளை மேலேயுள்ள பின்னூட்டத்தில் தந்துள்ளேன்...

சமஸ்கிருதம் தெரிந்தோர் இவ்வரிகளை ஆய்ந்து அறியலாம்.

டோண்டு அவர்களே, இவ்வரிகள் தங்கள் வாதத்திற்கு வலு சேர்க்கும் திறன் உடையவையே, சமஸ்கிருதம் சரி வர தெரியாதவரை.

பார்க்க

http://www.stephen-knapp.com/vegetarianism_recommended_in_Vedic_scripture.htm

11:33 PM  
Blogger சாத்வீகன் said...

டோண்டு அவர்களே

தங்கள் வாதத்திற்கு வலு சேர்க்கும் பக்கம் ஒன்று...


http://india30.tripod.com/rama.htm

11:38 PM  
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அங்கேயே வருகிறேன். இங்கு விரதம் என்று கூறியிருப்பது முக்கியம். அசைவ உணவு உண்பவர்கள் கூட மாதத்தில் சில நாட்கள் விரதம் இருப்பதைப் போல என்று வைத்துக் கொள்ளலாம்//

ஏக பத்னி விரதம் - இதுவும் விரதம் தான் ஐயா; காட்டில் இருக்கும் போது மட்டும் தானா இது? அல்லவே!
அதே போல் தான் புலால் மறுத்தல் என்ற விரதமும்!

"புலால் மறுத்ததால் தான் அவனுக்குப் பெருமை...அப்படி இல்லாமல் உண்டிருந்தானே ஆனால் சிறுமை" என்று சொல்ல வரவில்லை!

இறைவனின் அபார கருணை உள்ளம் தான் இங்கு முக்கியம்; அதுவே கொல்லாமையுடன் கூடிய புலால் மறுத்தலாய் வெளிப்பட்டது என்பது வால்மீகி மற்றும் கம்பன் பார்வை.

சத்ரியன் என்ற ஒரே காரணத்துக்காக, குலப் பழக்கங்களை இராமன் கொள்ளவில்லை; அதில் ஏக பத்னி விரதம் மற்றும் புலான் மறுத்தல் இரண்டும் தலையாயவை! ராஜ ரிஷி ஜனகரின் வழக்கங்களையும் இங்கு ஒப்பு நோக்கிப் பார்த்தால் இந்த ஐயமே எழாது!

6:54 AM  
Blogger சாத்வீகன் said...

நன்றி கண்ணபிரான்.
தங்களின் கருத்துக்களோடு முழுதும் ஒத்துப்போகிறேன்.

8:03 AM  
Blogger சாத்வீகன் said...

ஹரிஹரன் அவர்களே

நமது கடவுளர்களை நாம் நமது பெற்றோரிடமிருந்தும் அவர்களின் பாரம்பரியத்திலிருந்துமே பெறுகிறோம்...
சுயமாக சிந்திக்க துவங்கும் காலத்திலேயே அக்கடவுளர் மீது மேலும் விருப்பு கொள்வதோ மறுதலித்தலோ நிகழ்கிறது.

நான் இராமனை வழிபடுபவன் அல்ல.
இராமன் கடவுளாய் என்னை கவர்ந்ததை காட்டிலும் காவிய நாயகனாகவே என்னை அதிகம் கவர்கிறான்.

தங்களுடைய கேள்வித்தளம் சத்ரிய ராமனை, பிராமணர் கொள்வதேன் என செல்கிறது. கடவுளர்க்கு பிறப்பு இல்லையாதலால் அவர்கள் மேல் வர்ணமும் இல்லை.

மாலவனின் பத்து அவதாரங்களில் வாமனனும் பரசுராமனும் மட்டுமே அந்தணர். மச்சமோ, கூர்மமோ, வராகமோ, நரசிம்மமோ மனிதனின் கீழான பிறவிகளே. கண்ணனோ இடையன்.

எனது கடவுளை நான் எந்த வடிவில் காண விரும்புகிறேனோ அவ்வடிவில் தொழுகிறேன்.

அவரை உக்கிர மூர்த்தியாய் நினைந்தால் நரசிம்மனையும்,
லீலா வினோதனாய் கொண்டால் கண்ணனையும்
ஒழுக்க சீலனாய் கொண்டால் இராமனையும் தொழலாம்.

நான் சொல்ல விழைவதெல்லாம் நமது கடவுளரை நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம், பிறப்பும் வளர்ப்பும் ஒரு தூண்டல் மட்டுமே. கடவுளரை தொழ வர்ணமோ, பிறப்போ ஒரு தடை இல்லை என்பதே.

8:41 AM  
Blogger jeevagv said...

நான் ஏன் புலால் மறுக்கிறேன்?
என் விளக்கம்:
என் பழைய பதிவொன்றுக்கு அழைக்கிறேன்:
http://jeevagv.blogspot.com/2005/04/blog-post_09.html

8:36 PM  
Blogger சாத்வீகன் said...

Hariharan #27345042
Hariharan #26491540

தங்கள் இருவரையும் நானறியேன்.

தங்கள் பின்னூட்டங்கள் இப்பதிவோடு பொருந்தி வராததால் நீக்கப்படுகின்றன.

தவறாக எண்ணல் வேண்டாம்.

இக்குறிப்பு பின்னூட்டமும் விரைவில் நீக்கப்படும்.

வந்தமைக்கும் வாசித்தமைக்கும் பின்னூட்டியமைக்கும் நன்றி.

சாத்வீகன்.

7:28 AM  

Post a Comment

<< Home