இருத்தலை உறுதி செய்யும் கவிதைகள்
எழுதப் படாத பக்கங்கள்
புரட்டி புரட்டி
பார்க்கிறேன்.
இதை விட எனது
வாழ்க்கையை நான் சிறப்பாக
எழுதி இருக்க முடியாது.
*******
காகிதத்தில் கொட்டிய வார்த்தைகள்
கதறிக் கொண்டிருந்தன.
"நாங்கள் வார்த்தைகள்."
"கவிதை என்று எப்படி சொல்வாய் ?"
********
மீண்டும் பேனா மூடி திறந்தேன்
மீண்டும் கவிதையா ?
காகிதங்கள் ஓடி ஒளிந்தன.
பேனாவை வீசியெறிந்தேன்
விசைப்பலகையொன்றில் தட்டச்ச துவங்கினேன்.
********
எதற்கு இந்த கவிதைகள்
அல்லது வார்த்தைகள்.
இவை எப்பொருளைப் பாடுகின்றன.
இவை எதையும்
பாடுவதில்லை.
இவ்வரிகள்
நான் இருக்கின்றேன்
என்பதை உறுதி செய்கின்றன.
அவ்வளவே.
********
ஓடி ஒளிந்த
காகிதங்களே !
திரும்பி வாருங்கள்.
இனி வார்த்தைகளை
பிரித்து போட்டு
பின் நவீனத்துவம் என்று
சொல்ல மாட்டேன்.
********
இனியும் எழுதுவேன்
வார்த்தைகளே
அச்சம் வேண்டாம்.
நீங்கள் உங்களை வார்த்தைகள்
எனச் சொல்லிக் கொள்ளுங்கள்.
நான் கவிதை என்று சொல்லிக்
கொள்கிறேன்.
********
எழுதத் துவங்குகிறேன்
வார்த்தைகளுக்கு வலிக்காத வண்ணம்.
********